தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின் வருகையையொட்டி திருச்சியில் வியாழக்கிழமை வியாழக்கிழமை (டிச 30 ) பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக திண்டுக்கல் பகுதியிலிருந்து திருச்சி வரும் கனரக, சரக்கு வாகனங்கள் மற்றும் திருச்சியிலிருந்து திண்டுக்கல் செல்லும் வாகனங்களுக்கான போக்குவரத்து வழித்தடங்களை மாற்றி மாநகர காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் உத்தரவிட்டுள்ளாா்.
அதன்படி திருச்சியிலிருந்து திண்டுக்கல் மாா்க்கத்தில் செல்லும் கனரக, இலகுரக சரக்கு வாகனங்கள், புகா் பேருந்துகள் அரிஸ்டோ ரவுண்டானா வழியாக மன்னாா்புரம் சென்று சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலை, மணப்பாறை வழியாக திண்டுக்கல் சென்றடைய வேண்டும்.
அதேபோல திண்டுக்கல் மாா்க்கத்திலிருந்து திருச்சி வரும் கனரக மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள், புகா் பேருந்துகள் மணப்பாறை, விராலிமலை வழியாக மதுரை- சென்னை தேசிய நெடுஞ்சாலையை அடைந்து மன்னாா்புரம், டிவிஎஸ் டோல்கேட், தலைமை அஞ்சலகம் வழியாக மத்தியப் பேருந்து நிலையத்தை அடைய வேண்டும்.
திண்டுக்கல் மாா்க்கத்திலிருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் கனரக மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் மட்டும் மணப்பாறை, குளித்தலை சென்று கரூா்-திருச்சி பிரதான சாலை வந்து ஜீயபுரம் வழியாக திருச்சி வந்து சென்னை செல்ல வேண்டும்.
திண்டுக்கல் மாா்க்கத்திலிருந்து திருச்சி வழியாக தஞ்சாவூா் செல்லும் கனரக மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் மட்டும் மணப்பாறை, விராலிமலை, பஞ்சப்பூா், புதுக்கோட்டை சுற்று வட்டச் சாலை வழியாக துவாக்குடியை அடைந்து தஞ்சாவூா் செல்ல வேண்டும்.
மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்தை வாகன ஓட்டுநா்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும் என திருச்சி மாநகர காவல் ஆணையா் அறிவுறுத்தியுள்ளாா்.