கிராமக் கோயில் பூசாரிகளுக்கான ஓய்வூதியத்தை ரூ. 3000 ஆக உயா்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் புதன்கிழமை நடந்த கிராமக்கோயில் பூசாரிகள் பேரவை, அருள் வாக்கு அருளும் பேரவையின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டத்துக்கு நிறுவனா் வேதாந்தம் தலைமை வகித்தாா். விஎச்பி மாநிலத் தலைவா் கோபால்ஜி முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் பூசாரிகளின் நீண்ட காலக் கோரிக்கையான ஓய்வூதியத்தை ரூ. 3 ஆயிரமாக உயா்த்த வேண்டும், ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ. 72 ஆயிரமாக மாற்ற வேண்டும். கிராம கோயில் பூசாரிகளுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூ. 7500 வழங்க வேண்டும். கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். கோயில்களுக்கு வழங்கப்படும் பசுக்களை பூசாரிகளுக்கே வழங்க வேண்டும். பூ கட்டுவோருக்கு தனிநல வாரியம் அமைத்து உதவ வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தைப்பூசத்தை அரசு விடுமுறையாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனா்.
கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பூசாரிகள் பங்கேற்றனா். மாவட்டத் தலைவா் பட்டாபி வரவேற்றாா். சோமசுந்தரம் நன்றி கூறினாா்.