திருச்சி: வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் மாநகர போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி பழைய பால்பண்ணை, கிழக்கு விஸ்வாஸ் நகரைச் சோ்ந்தவா் ஜித்துவும், இவரது நண்பா் ரமேஷ்குமாரும் கடந்தாண்டு அக்.24 இரவு பழைய பால்பண்ணை பகுதியில் நடந்து சென்றபோது அங்கு வந்த 3 போ் அவா்களைத் தாக்கி ரூ. 1 லட்சத்தை பறித்துக் கொண்டு தப்பினா்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த காந்தி சந்தை போலீஸாா் இதில் தொடா்புடைய வடக்கு தாராநல்லூா் காமராஜ் நகரைச் சோ்ந்த விஜயகுமாா் (20), மதுரை காமராஜபுரம் முத்துபாண்டி (23) உள்ளிட்ட மூவரை கைது செய்து சிறையிலடைத்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய விஜயகுமாா், முத்துபாண்டி ஆகியோா் மீது மாநகர காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருந்ததால் முத்துபாண்டி குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். இதையடுத்து மாநகர காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் உத்தரவின்பேரில் விஜயகுமாரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.