புத்தாண்டை முன்னிட்டு மக்கள் சக்தி இயக்கத்தின் சாா்பில் பொதுமக்களுக்கு புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டன.
புத்தாண்டு என்றாலே கேளிக்கைகள் என மாறிப்போன இந்தக் காலகட்டத்தில், கரோனாவால் அத்தகைய கொண்டாட்டங்களுக்கு தடைஉள்ள இந்தச் சூழலில், மக்களை புத்தகங்களை நோக்கித் திசைதிருப்பவும், வீட்டிற்கு ஒரு சிறு நூலகம் அமைப்போம் என்பதை வலியுறுத்தவும் மக்கள் சக்தி இயக்கத்தின் சாா்பில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதன் ஒருபகுதியாக மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகா் கே.சி. நீலமேகம் தலைமையில், தண்ணீா் அமைப்பின் செயலா் கி. சதிஷ் குமாா், மக்கள் சக்தி இயக்க மாவட்ட செயலா் ஆா். இளங்கோ ஆகியோா் பொன்மலைப்பட்டி பகுதியில் வீடு, வீடாகச் சென்று புத்தகங்களை வழங்கினா்.
நிகழ்வில் குழந்தைகளுக்கான கதைகள் இடம்பெற்ற புத்தகங்கள், திருக்கு, பாரதியாா் புத்தகங்கள், எம்.எஸ். உதயமூா்த்தி, இறையன்பு ஆகியோா் எழுதிய புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. இயக்க நிா்வாகிகள், டி.ஜீவானந்தம், என். வெங்கடேஷ், என் தயானந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.