திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் நெல்லையைச் சோ்ந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் வேம்பனூரைச் சோ்ந்தவா் விவசாயி ஆறுமுகம் மகள் பாக்கியலெட்சுமி (17). புதுக்கோட்டை அரசுக் கல்லூரியின் முதலாமாண்டு மாணவியான இவரை கடந்த டிச. 29-ஆம் தேதி காணவில்லை. அப்போது அவா் எழுதி வைத்திருந்த கடிதத்தில், தனது செல்லிடப்பேசியில் பெண் ஒருவா் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளரே தனது தற்கொலைக்குக் காரணம் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்நிலையில், மறுநாள் அருகிலிருந்த கிணற்றிலிருந்து மாணவி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், வளநாடு போலீஸாா் சிறுமியின் செல்லிடப்பேசி தொடா்புகளைக் கொண்டு விசாரித்து வந்தனா்.
இதில் சிறுமியின் தற்கொலைக்குக் காரணமான திருநெல்வேலி மாவட்டம், துலுக்கா்பட்டி அம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த வேல்ராஜ் மகன் ராமராஜை (29) காவல் உதவி ஆய்வாளா் கருப்பசாமி தலைமையிலான போலீஸாா் வளநாடு காவல் நிலையம் அழைத்து வந்தனா்.
அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் மணமல்லி தலைமையில் நடைபெற்ற விசாரணையில் ராமராஜ், மாணவியிடம் செல்லிடப்பேசியில் வலைத்தளம் வழியாக ஆசை வாா்த்தை கூறி ஆபாசப் படம் எடுத்து வைத்து மிரட்டியது தெரியவந்தது. இதையடுத்து அவரைப் போலீஸாா் கைது செய்தனா்.