சோபனபுரம் விளையாட்டு பேரவை சார்பில் நடைபெற்ற கைப்பந்து விளையாட்டு போட்டியில் வென்ற அணி்க்கு பரிசளிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம், சோபனபுரம் விளையாட்டுப் பேரவை சார்பில் முதலாமாண்டு கைப்பந்து போட்டி ஜன. 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் திருச்சி, சேலம், பெரம்பலூர், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 40 அணியினர் கலந்துகொண்டனர். துறையூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் கைப்பந்து விளையாட்டு வீரரும், திருமணக் கூட உரிமையாளருமான டி.வி.எஸ். இளங்கோவன் நடுவராக செயல்பட்டார்.
இரண்டு நாள்களில் நூற்றுக்கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெற்றது. இறுதியாக சேலம் மாவட்டம் பூலாவாரி அணி முதலிடத்தையும், திருச்சி மாவட்டத்தில் பேரூர் அணி 2ஆம் இடத்தையும், சோபனபுரம் அணி 3ஆம் இடத்தையும் பெற்றது. ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதிப்போட்டிக்கு பிறகு நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் வெற்றிப் பெற்ற முதல் அணிக்கு ரூ. 12000 ரொக்கத்தை திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக வழக்குரைஞர் பிரிவு செயலர் அ. அன்பு பிரபாகரன் வழங்கினார்.
இரண்டாமிடம் பெற்ற அணிக்கு ரூ.10000 ரொக்கத்தை உப்பிலியபுரம் உணவக உரிமையாளர் ஜானகிராமன் வழங்கினார். சோபனபுரம் இஸ்லாமிய நண்பர்கள் மற்றும் அல் சாரார் விளையாட்டு குழு சார்பில் ரூ.8000 ரொக்கமும், நான்காமிடம் பெற்ற விசுவை அணிக்கு ரூ. 6000 ரொக்கம் ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியின் 2014ம் ஆண்டு கைப்பந்து விளையாட்டு அணி சார்பில் வழங்கப்பட்டது. சோபனபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் உள்ளிட்ட இளைஞர்கள் கைப்பந்து போட்டி ஏற்பாடுகளை செய்தனர்.