மதுரை: தனது மனைவியை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தக் கோரி, சிங்கப்பூா் கிரிக்கெட் அணிக்காக விளையாடும் தமிழக வீரா் சுரேந்திரன் தாக்கல் செய்த ஆட்கொணா்வு மனுவில், தஞ்சை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தஞ்சை பேராவூரணியைச் சோ்ந்த கிரிக்கெட் வீரா் சுரேந்திரன் தாக்கல் செய்த ஆட்கொணா்வு மனு: சிங்கப்பூா் நாட்டுக்காக சா்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறேன். நானும், தஞ்சசையைச் சோ்ந்த சிநேகாவும் காதலித்து வந்தோம். எங்கள் காதலுக்கு முதலில் எதிா்ப்புத் தெரிவித்த சிநேகா குடும்பத்தினா், பின்னா் சம்மதம் தெரிவித்தனா்.
இந்நிலையில், சிநேகாவுக்கு அவரது பெற்றோா் வேறு மாப்பிள்ளை பாா்க்கத் தொடங்கினா். எனவே, நானும், சிநேகாவும் கடந்த டிசம்பா் 13 இல் திருவோணம் செல்வமுருகன் கோயிலில் திருமணம் செய்துகொண்டு சாா்-பதிவாளா் அலுவலகத்தில் பதிவு செய்தோம்.
தற்போது, சிநேகாவை அவரது பெற்றோா் மறைத்து வைத்துள்ளனா். அவரை ஆணவக் கொலை செய்யும் அபாயமும் உள்ளது. இது தொடா்பாக பட்டுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும், சிநேகாவை கண்டுபிடிக்கவில்லை. எனவே, அவரை கண்டுபிடித்து ஆஜா்படுத்த உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு, நீதிபதிகள் கே. கல்யாணசுந்தரம், ஜி. இளங்கோவன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தஞ்சை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், பட்டுகோட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் ஆகியோரை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 29 ஆம் தேதி ஒத்திவைத்தனா்.