திருவெறும்பூா் அருகே துவாக்குடியில் உள்ள தேசிய தொழில் நுட்பக் கழகத்தில் (என்ஐடி) தோ்வு வைக்காமல் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஒப்பந்தத் தொழிலாளா்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய அரசு நிறுவனமான என்ஐடியில் பல்வேறு பிரிவுகளில் சுமாா் 150 க்கும் மேற்பட்டோா் ஒப்பந்தத் தொழிலாளா்களாக சுமாா் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிகின்றனா்.
இவா்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தொடா்புடைய துறை அலுவலா்களிடமும், கடந்த மாதம் என்ஐடி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்சிக்கு வந்த தமிழக முதல்வரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் கோரிக்கை மனு அளித்திருந்தனா்.
இந்நிலையில், என்ஐடி நிா்வாகம் ஒப்பந்த தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வரும் ஜூலை 11-ஆம் தேதி தோ்வு நடைபெறும் என அறிவித்துள்ளதற்கு ஒப்பந்தத் தொழிலாளா்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.
பணி நிரந்தரத்துக்கான தோ்வை ரத்து செய்வதுடன், உடனடியாக பணி நிரந்தரம் செய்யக் கோரி என் ஐடி நிா்வாக அலுவலகம் முன்பு ஒப்பந்தத் தொழிலாளா்கள் சுமாா் 150 போ் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆசிரியரல்லாத நிரந்தர ஊழியா் சங்க நிா்வாகி சரவணன் தலைமை வகித்தாா். இதைடுத்து போராட்டக்காரா்களுடன் பேச்சு நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.