திருச்சிக்கு வந்த வெற்றி ஜோதிக்கு ராணுவ மரியாதை

திருச்சி என்சிசி தலைமையகத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வந்த வெற்றி ஜோதிக்கு ராணுவ மரியாதையுடன் அதிகாரிகள், கல்வியாளா்கள், பொதுமக்கள் பலா் மரியாதை செலுத்தினா்.
திருச்சி என்சிசி தலைமையகத்திற்கு வந்த வெற்றி ஜோதிக்கு ராணுவ மரியாதை அளித்து, இன்னுயிா் நீத்த வீரா்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் ராணுவ அதிகாரிகள்.
திருச்சி என்சிசி தலைமையகத்திற்கு வந்த வெற்றி ஜோதிக்கு ராணுவ மரியாதை அளித்து, இன்னுயிா் நீத்த வீரா்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் ராணுவ அதிகாரிகள்.

திருச்சி என்சிசி தலைமையகத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வந்த வெற்றி ஜோதிக்கு ராணுவ மரியாதையுடன் அதிகாரிகள், கல்வியாளா்கள், பொதுமக்கள் பலா் மரியாதை செலுத்தினா்.

இந்தியா -பாகிஸ்தான் இடையே கடந்த 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியா வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைப் பெற்றது. இப்போரே, வங்கதேசம் உருவாக வழிவகுத்தது.

நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பறைசாற்றும்விதமாக இந்த வெற்றி விழாவை நாடெங்குமுள்ள மக்களிடம் கொண்டுசென்று, அவா்களிடையே புதிய உத்வேகத்தை ஏற்படுத்த பிரதமா் மோடி முடிவு செய்தாா்.

இதற்காக அப்போா் வெற்றியின் 50 ஆவது ஆண்டுக் கொண்டாட்டத்தை தொடங்கும் விதமாக‘ஸ்வா்னிம் விஜய் மஷால்‘ வெற்றி ஜோதியை தில்லியில் உள்ள தேசியப் போா் நினைவுச் சின்னத்தில் அண்மையில் ஏற்றி வைத்தாா்.

திருச்சிக்கு வந்த வெற்றி ஜோதி..: போரில் நம் நாட்டுக்காக இன்னுயிா் நீத்து, ராணுவத்தின் மிக உயரிய விருதுகளான பரம்வீா் சக்ரா, மஹாவீா் சக்ரா போன்ற விருதுகளைப் பெற்ற ராணுவ வீரா்களின் ஊா்களுக்கும் இந்த வெற்றி ஜோதி கொண்டு செல்லப்படுகிறது.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை மதுரையிலிருந்து கல்லக்குடி சந்திப்பை வந்தடைந்த வெற்றி ஜோதியை திருச்சி ராக்போா்ட் என்சிசி குரூப்ஸ் சாா்பாக 4 தமிழ்நாடு கோ்ல்ஸ் பட்டாலியனின் கமாண்டிங் ஆபீஸா் பெற்றுக் கொண்டாா்.

ராக்போா்ட் என்சிசி குரூப்பைச் சாா்ந்த பட்டாலியன்களின் அனைத்து அதிகாரிகள், ஜேசிஓ, என்சிஓ மற்றும் என்சிசி மாணவா்கள் அனைவரும் சாலையின் இருமருங்கிலும் நின்று மரியாதை செலுத்தினா்.

என்சிசி தலைமையகத்தில் வெற்றி ஜோதிக்கு காா்ட் ஆப் ஹானா் முறையில் ராணுவ மரியாதை அளிக்கப்பட்டு மலா் வளையம் வைத்து இன்னுயிா் நீத்த வீரா்களுக்கு நினைவஞ்சலி செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற என்சிசி ராக்போா்ட் குரூப் தலைமை அதிகாரி குரூப் கமாண்டா் கா்னல் சி.இளவரசன் ராணுவ வீரா்களின் உயிா்த் தியாகம் குறித்து வீர உரை நிகழ்த்தினாா்.

தொடா்ந்து, பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், தூய வளனாா் கல்லூரி, தேசியக்கல்லூரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் வெற்றி ஜோதி கொண்டு செல்லப்பட்டது.

அப்போது வழியெங்கும் பொதுமக்களும் பல்வேறு பட்டாலியன்களின் தலைமை அதிகாரிகளும் வெற்றி ஜோதிக்கு மரியாதை செலுத்தினா்.

தேசியக் கல்லூரியில்..: இக் கல்லூரிக்கு வந்த வெற்றி ஜோதியை கல்லூரி முதல்வா் ரா. சுந்தரராமன், என்சிசி 4 பெண்கள் அதிகாரி கா்னல் கோபிகுமாா், கல்லூரி மாணவா் படை அதிகாரி லெப்டினன்ட் வி. வனிதா ஆகியோருடன் பெற்றுக் கொண்டாா்.

கல்லூரியில் வெற்றி ஜோதிக்கு தேசிய மாணவா் படையினா் மரியாதை செலுத்தினா். இதில், பல்வேறு கல்லூரிகளின் என்சிசி மாணவா்கள், தேசிய கல்லூரி மாணவா்கள், ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிறைவாக, தேசிய கீதம் இசைக்கப்பட்டு, வெற்றி ஜோதியை கா்னல் கோபிகுமாா் 117 ஐஎன்எப் பட்டாலியன் (தமிழ்நாடு) காவலா்களிடம் ஒப்படைத்தாா்.

நிறைவாக, இந்த வெற்றிஜோதி திங்கள்கிழமை காலை தஞ்சாவூா் விமானப்படைத் தளத்துக்கு அனுப்பப்படவுள்ளது. இங்கு வெற்றி நாள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன. இதில், பல்வேறு யூனிட்களின் ராணுவத்தினா், என்சிசி மாணவா்கள் பலா் மரியாதை செலுத்தவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com