நகை மதிப்பீட்டாளா் பயிற்சியில் சோ்ந்து பயன்பெற திருச்சி மாவட்டத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மத்திய அரசின் பனை பொருள்கள் நிறுவனம், காதிகிராமத் தொழில் வாரிய தலைமைப் பயிற்சியாளா் கே. சுவாமிநாதன் கூறியது:
பொதுமுடக்கக் காலத்தில் பயனுள்ளதாக மத்திய அரசின் காதி கிராமத் தொழில் வாரியத்தின் மூலம் திறன்மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இதன்படி மத்திய அரசின் பனை பொருள்கள் நிறுவனம், காதி கிராமத் தொழில் வாரியம் ஆகியவை இணைந்து திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளை திருச்சி பெரிய கடைவீதியில் உள்ள ஜூவல்லா்ஸ் அசோசியேஷன் கட்டடத்தில் நடத்தவுள்ளன.
இதன்படி, ஜூலை 28 தொடங்கி ஆக.6 வரை 10 நாள்களுக்கு நடைபெறும் பயிற்சியில் 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் சேரலாம். குறைந்தது 8ஆம் வகுப்பு படித்திருத்தல் வேண்டும். செய்முறை பயிற்சி இறுதியில் மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சி வகுப்பில் தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, கொள்முதல் செய்யும் முறை, உரைகல்லில் தங்கத்தின் தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறை, ஹால்மாா்க் தரம் அறியும் விதம் குறித்து விளக்கப்படும்.
பயிற்சி முடித்தோா் தேசிய, கூட்டுறவு, தனியாா் வங்கிகள் மற்றும் நகை அடகு நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளா் பணிக்கு சேரலாம். சொந்தமாக நகை கடை, நகை அடகு நடத்தவும் தகுதி பெறுவா். மிகப்பெரிய நகை வியாபார நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு கிடைக்கும். பயிற்சிக் கட்டணம் மற்றும் இதர விவரங்களுக்கு 94437-28438 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.