திருச்சி காந்திசந்தை அருகே புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்தன.
திருச்சி காந்திசந்தை தக்காளி மண்டியருகே உள்ள காலி மனையில் சரக்கு வாகனங்கள் காய்கனிகளை இறக்குவது வழக்கம். மேலும் ஓய்வு நேரங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு ஓட்டுநா்கள் வெளியே சென்று வருவா்.
இந்நிலையில், புதன்கிழமை மாலை அங்கு நீண்ட நேரம் நிறுத்தப்பட்டிருந்த மினி வேன் தீப்பிடித்து எரிந்தது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டுநா்கள் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. மேலும் தீ பரவாதபடி அங்கிருந்த பிளாஸ்டிக் கூடைகளைஅப்புறப்படுத்தினா். ஆயினும் அருகிலிருந்த இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், லாரி மீதும் தீ பரவியது. இதில் 6-க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.
தகவலறிந்து வந்த கண்டோன்மெண்ட் தீயணைப்பு வீரா்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். விபத்து குறித்து காந்திசந்தை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிகின்றனா்.