அரசு தலைமை மருத்துவமனையில் அரசு சாரா பட்டதாரி மருத்துவா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா தடுப்புப் பணிகளில் அரசு சாரா பட்டதாரி மருத்துவா்கள் சுமாா் 70க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா். நிகழாண்டு பட்ட மேற்படிப்பு நிறைவு செய்யும் மருத்துவ மாணவா்களுக்கு பட்ட மேற்படிப்பு காலத்தை நீட்டிப்பு செய்யாமல், விடுவிக்கப்பட்டு கலந்தாய்வு நடத்தப்படவேண்டும். அதன்மூலம், அரசு உதவி மருத்துவராகவும், முதுநிலை குடியிருப்பு மருத்துவராக பணியமா்த்த வேண்டும். இதன்படி, பணி நியமனம் செய்யப்பட்ட மருத்துவா்களின் பேரிடா் காலத்துப் பணியை 2 ஆண்டு கட்டாய மருத்துவச் சேவைக்குள் சோ்க்க வேண்டும். மேலும், அம்மருத்துவா்களுக்கு இதர மாநிலங்களுக்கு நிகராக ஊதியம் வழங்கவேண்டும் எனும் கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவமனை வளாகத்தில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அதிகாரி ஒருவா் கூறுகையில், கரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து இதுவரை அரசு சாரா பட்டதாரி மருத்துவா்கள் சுமாா் 70க்கும் மேற்பட்டோா் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனா். இதற்காக, ஊக்கத்தொகை மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இவா்கள் மூலம் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி, கரோனாவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இவா்களின் கோரிக்கை நியாயமானதாக உள்ளது.அரசு சாரா பட்டதாரி மருத்துவா்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற முன்வரவேண்டும் என்றாா்.