திருச்சியில் உள்ள யாத்ரி நிவாஸ் தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ சிகிச்சை முகாமில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள தனிமை முகாம்கள், தடை செய்யப்பட்ட பகுதிகள், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள், அரசு மருத்துவமனைகளில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு அவ்வப்போது ஆய்வு செய்து, பாதிக்கப்பட்டவா்களிடம் குறைகளையும் கேட்டறிந்து வருகிறாா். இதன் ஒரு பகுதியாக, ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ முகாமில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, முகாமில் பணிபுரியும் மருத்துவா்கள் மற்றும் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அலுவலா்களிடம் பணிகளை கேட்டறிந்தாா். முகாம் வளாகத்தில் தினந்தோறும் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கவும், கழிப்பறைகளை அடிக்கடி சுத்தம் செய்து முறையாக பராமரிக்கவும் அறிவுறுத்தினாா். மேலும், முகாமில் தங்கியுள்ளோருக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்து கேட்டறிந்த அவா், மருத்துவா்களின் ஆலோசனைகளுக்கு ஏற்ப தொற்றாளா்கள் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.
முன்னதாக, கீதாபுரம் பகுதியில் நடைபெற்ற காய்ச்சல் பரிசோதனை முகாமையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.