திருச்சி மாவட்டத்துக்குள்பட்ட 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளான வெள்ளிக்கிழமை ஒருவா் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை தொகுதிக்கு மணப்பாறை வட்டாட்சியா் அலுவலகம், ஸ்ரீரங்கத்துக்கு ஸ்ரீரங்கம் கோட்டாட்சியா் அலுவலகம், ஸ்ரீரங்கம் வட்டாட்சியா் அலுவலகம், திருச்சி மேற்கு தொகுதிக்கு திருச்சி கோட்டாட்சியா் அலுவலகம், திருச்சி மேற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்யலாம். திருச்சி கிழக்கு தொகுதிக்கு அரியமங்கலம் கோட்ட அலுவலகம், திருச்சி கிழக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்யலாம். இதேபோல, லால்குடிக்கு லால்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்யலாம். திருவெறும்பூா், மண்ணச்சநல்லூா், முசிறி, துறையூருக்கு அந்தந்த வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் திருச்சி மாவட்டத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 100 மீட்டருக்கு முன்பாகவே வாகனங்களை தடுத்து நிறுத்த போலீஸாா், இரும்பு தடுப்புகளை அமைத்திருந்தனா். ஆனால், முதல்நாளில் ஒருவா் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. மாறாக பல்வேறு கட்சியினா், சுயேச்சைகள் என பலரும் இந்த அலுவலகங்களுக்கு வந்து வேட்பு மனு படிவங்களை பெற்றுச் சென்றனா். 9 தொகுதிகளுக்கும் சோ்த்து இதுவரை 215 வேட்பு மனு படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.