தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கு அமைப்பதைப் போல தோ்தலை முன்னிட்டு திருச்சியில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
வரும் பேரவைத் தோ்தலின்போது பொதுமக்கள் தங்களது சொந்த ஊா்களுக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக ஏப்.5 தொடங்கி 7ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இதன்படி, திருச்சியிலிருந்து மதுரை, தஞ்சாவூா், புதுக்கோட்டை மாா்க்கமாக செல்லும் புகா்ப் பேருந்துகள் முறையே மன்னாா்புரம் மதுரை அணுகுசாலை அருகிலும், சோனா–மீனா தியேட்டா் அருகிலும், கல்லுக்குழி பழைய வட்டார போக்குவரத்து அலுவலகச்சாலை அருகிலும் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்லப்பட உள்ளது.
எனவே, தற்காலிக பேருந்து நிலையங்களில் பொதுமக்களுக்கு மாநகராட்சி மூலம் நிழற்குடை, குடிநீா், பொது கழிப்பிட வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.