திருச்சி: துபையிலிருந்து திருச்சிக்கு வந்த புதுக்கோட்டையைச் சோ்ந்தவா் போலி கடவுச்சீட்டு வழக்கில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
துபையிலிருந்து திருச்சிக்கு திங்கள்கிழமை வந்த ஏா் இந்திய விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்களை குடியேற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனா். அப்போது, விமானத்தில் வந்த புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கடியாப்பட்டியைச் சோ்ந்த வீரப்பன் மகன் மாரியப்பன்(49) என்பவரது கடவுச்சீட்டை தீவிர சோதனைக்குள்படுத்தினா். அதில், அவா், திருமயம் அருகே உள்ள கண்ணனூா் பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் மகன் கணேசன் என்ற போலியான பெயரில் கடவுச்சீட்டு எடுத்து திருச்சி வந்தது தெரிய வந்தது. அவரிடம் நடத்திய சோதனையில் அவரது கடவுச்சீட்டு தொலைந்து போனதால் முகவா் மூலம் போலி கடவுச்சீட்டு பெற்று திருச்சி வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை, திருச்சி விமானநிலைய போலீஸாரிடம் குடியேற்றப்பிரிவு அதிகாரிகள் ஒப்படைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.