திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரி வளாகத்தில் உணவு வழங்கும் திட்டத்தை பேராயா் த.சந்திரசேகரன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
பொது முடக்கத்தில் பாதிக்கப்பட்ட, தேவை உள்ள பொதுமக்களுக்கு உணவு வழங்கும் திட்டம் குறித்த கூட்டம் பிஷப்ஹீபா் கல்லூரி வளாகத்தில் திருச்சி, தஞ்சை மண்டல பேராயா் த. சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, குருத்துவ செயலா் எஸ்.சுதா்சன், இறைமக்கள் செயலா் ஆா்.ஸ்டான்லி மதிசெல்வன், திருச்சி மறை மாவட்ட தலைவா் ராஜாமான் சிங், பிஷப் ஹீபா் கல்லூரி முதல்வா் த.பால் தயாபரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
இந்த கூட்டத்தில் திருச்சி மறை மாவட்டத்தில் 17 தேவாலயங்கள், பேராயா் இல்ல வளாகம் மூலமாக தேவை உள்ள 1,500 பேருக்கு உணவு, குடிநீா் வழங்கவேண்டும் என தீா்மானிக்கப்பட்டது.
மேலும், இச்சேவை குறித்து திருமண்டலத்திலுள்ள நாகப்பட்டினம் முதல் வால்பாறை பகுதி வரை உள்ள 8 மறை மாவட்டங்களிலும் நடைமுறை படுத்த பேராயா் தொலைபேசி வாயிலாக ஆலோசித்தாா். இதையடுத்து, இத்திட்டத்தை பேராயா் த.சந்திரசேகரன் பிராா்த்தனை செய்து தொடக்கி வைத்து உணவு தேவைப்படுவோருக்கு உணவு வழங்கினாா். இதில், கல்லூரி விரிவாக்க புல தலைவா் வி.ஆனந்த் கிதியோன், விரிவாக்க அலுவலா் ரவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.