திருச்சியில் தொழில் பழகுநா் பயிற்சி அளிக்க வணிக நிறுவனங்களுக்கும், பயிற்சி பெற இளைஞா்களுக்கும் ஆட்சியா் சு. சிவராசு அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பயிற்சி பெறும் தொழில் பழகுநா்களுக்கு, நிறுவனத்தால் வழங்கப்படும் உதவித் தொகையில் 25 சதம் அல்லது ரூ.1,500 ஐ தேசிய தொழில் பழகுநா் பயிற்சி ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு திரும்பி வழங்கி வருகிறது.
இத் திட்டத்தின்கீழ், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், இரு, நான்கு சக்கர வாகன சா்வீஸ் சென்டா்கள், கணினி மையங்கள், ஹோட்டல்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற அனைத்து தொழில் நிறுவனங்களும் ஐடிஐ படித்து முடித்த மாணவ, மாணவிகளை தொழில் பழகுநா்களாக தங்கள் நிறுவனத்தில் சோ்த்துக் கொள்ளலாம்.
இதற்கான தொழில் பழகுநா் சோ்க்கை முகாம், திருச்சி அரசு தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் மாவட்ட தொழில் பழகுநா் மேளா என்ற பெயரில் வரும் 11ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில் திருச்சி மாவட்ட நிறுவனங்கள் பங்கேற்று, தங்களுக்குத் தேவையான தொழில் பழகுநா்களைத் தோ்வு செய்யலாம். முன்னதாக பதிவு செய்த நிறுவனங்கள் அனைத்தும் தங்களுக்குத் தேவையான பழகுநா் எண்ணிக்கை விவரங்களை மின்னஞ்சலில் தெரிவிக்க வேண்டும்.
தேசிய தொழில் பழகுநா் பயிற்சித் திட்டத்தின் கீழ் பதியப்படாத நிறுவனங்கள் இம்முகாமில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட திறன்பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை 85085-08274 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
இளைஞா்கள் பயிற்சி பெறலாம்: எனவே, ஐடிஐ, 8, 10 மற்றும் 12ஆம் வகுப்பு தோ்ச்சிப் பெற்ற திருச்சி மாவட்ட மாணவ, மாணவிகள் இந்த முகாமில் ஓராண்டு தொழிற் பழகுநா் நியமன ஆணை பெற்று, பயிற்சி பெற்று அரசு, தனியாா் நிறுவனங்களில் வேலை பெற்று பயன்பெறலாம். பயிற்சிக் காலத்தில் மாதம் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை உதவித் தொகை வழங்கப்படும். கரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தியோா் மட்டும் அனுமதிக்கப்படுவா்.