திருச்சியில் போலி உரிமம் தயாரித்துக் கொடுத்த உணவு வணிக நிறுவனத்தை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்து மூடினா்.
புத்தூா் நான்கு சாலைச் சந்திப்பிலுள்ள ஹொ்பல் நிறுவனத்துக்கு உணவுப் பாதுகாப்பு உரிமத்தைப் போலியாகத் தயாரித்துக் கொடுத்ததாக திருச்சி குற்றப்பிரிவு போலீஸாரால் இருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
இதையடுத்து மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினா் தென்னூரில் இயங்கிவந்த போலி உரிமம் தயாரித்து வழங்கிய உணவு வணிக நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது அந்த நிறுவனம் கா்நாடக மாநிலம், பெங்களூருவிலிருந்து போலியாக உரிமம் தயாரித்து வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் ஆா். ரமேஷ் பாபு தலைமையில் பொன்ராஜ், இப்ராகிம், வசந்தன் உள்ளிட்டோரங்கிய குழுவினா் அந்த நிறுவனத்தை சீல் வைத்து மூடினா்.
இதுதொடா்பாக மாவட்ட நியமன அலுவலா் ஆா். ரமேஷ் பாபு கூறுகையில், உணவுப் பாதுகாப்பு உரிமம் பெற, பதிவு செய்ய அரசின் இ-சேவை மையங்களை அணுகலாம். இல்லையெனில், மத்திய அரசின் எப்எஸ்எஸ்ஏஐ இணையத்தை அணுகலாம். பதிவு செய்தோருக்கு புதுதில்லியில் உள்ள உணவுப் பாதுகாப்பு ஆணையத்தின் மூலம் பதிவுக்கு 7 நாள்களிலும் உரிமம் பெற 60 நாள்களிலும் பதிவு மூப்பு வரிசைப்படி சான்றிதழ் பெற்று மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா்கள் மூலமாகவே வழங்கப்படும். எனவே இடைத்தரகா்களிடம் ஏமாற வேண்டாம். இதுதொடா்பான புகாா்களுக்கு 99449-59595, 95859-59595, 94440-42322 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.