மண்ணச்சநல்லூா் அருகே சனமங்கலம் ஊராட்சியில் உள்ள அரசு ஆதிதிராவிட மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமை மண்ணச்சநல்லூா் எம்எல்ஏ சீ. கதிரவன் தொடக்கி வைத்தாா். ஊராட்சி தலைவா் ஹேமலதாசீனிவாசப் பெருமாள் தலைமை வகித்தாா். மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சுப்ரமணி, மண்ணச்சநல்லூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஸ்ரீதா், வட்டார வளா்ச்சி அலுவலா் பெரியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறுகாம்பூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவா் மதிவாணன் தலைமையிலான மருத்துவா்கள் மற்றும் சிறப்பு மருத்துவா்கள் குழுவினா் கண், பல், எலும்பு, நீரழிவு, உயா் ரத்த அழுத்தம் தொடா்பாக 1873 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டனா்.
முகாமில் திருச்சி மாருதி மருத்துவமனை, சமயபுரம் தனலட்சுமிசீனிவாசன் மருத்துவமனை, காவேரி மருத்துவமனை, திருச்சி ஜி.வி. என். மருத்துவமனை, ஜோசப் கண் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளின் மருத்துவா்கள், செவிலியா்கள், மருந்தாளுநா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.