திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மின்னல் தாக்கியதில் 5 பேர் காயமடைந்தனர். வீடும் இடிந்து, மின்சாதனப் பொருட்களும் பழுதாயின.
திருச்சி மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை இரவு பரவலான மழை பெய்தது. இதில், இனாம்குளத்துார் அருகே உள்ள சின்ன ஆலம்பட்டியில், மழை பெய்து கொண்டிருந்தபோது, செல்வம்(60) என்பவர் வீட்டில் மின்னல் தாக்கியது. இதில் வீட்டில் இருந்த செல்வம், அவரது மனைவி இந்திரா(50), செல்வகுமார்(29), ஆனந்த்(31), தனம்(50) ஆகிய 5 பேரும் காயமடைந்தனர்.
இதையும் படிக்க- பால்கே விருது வென்ற ரஜினி: ரசிகர்களை மயக்கிய ரகசியம்!
இதனை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அனைவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மின்னல் தாக்கியதில் மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள், டிவி உள்ளிட்ட மின்சாதனப் பொருள்கள் உடைந்து சிதறி உள்ளது.
மேலும் செல்வத்தின் வீட்டில் இருந்த கதவுகள் இரண்டாக பிளந்து உடைந்து விழுந்துள்ளது. இதன் காரணமாக அந்த கிராமம் முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ளது. செல்வம் அதிமுக பகுதி செயலாளர் என்பதையடுத்து, அதிமுக பிரமுகர்கள் வீட்டிற்குச் சென்று பார்வையிட்டதுடன் மருத்துவமனையிலும் சென்று நலம் விசாரித்தனர்.