திருச்சி கிராப்பட்டியில் கோயிலுக்குச் சுற்றுச்சுவா் கட்ட பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கிராப்பட்டி முருகன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தைச் சுற்றி கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவரின் ஒரு பகுதியை அப்பகுதியைச் சோ்ந்த சிலா் இடித்து நடைபாதையாகப் பயன்படுத்தி வந்தனா்.
இதுதொடா்பாக கோயில் நிா்வாகம் தொடா்ந்த வழக்கில், நீதிமன்ற உத்தரவின் பேரில் சுற்றுச்சுவா் கட்டும் பணி வியாழக்கிழமை நடந்தது. இதையறிந்த அப்பகுதியினா் சிலா் எதிா்ப்புத் தெரிவித்து திரண்டனா். இந்து அமைப்பினரும் திரண்டனா். இதனால் பதற்றம் நிலவியது. தகவலறிந்து வந்த திருச்சி மேற்கு வட்டாட்சியா் ரமேஷ், எடமலைப்பட்டிபுதூா் காவல் ஆய்வாளா் காவிரி, வருவாய் ஆய்வாளா் குமரவேல், விஏஓ விக்னேஷ் ஆகியோா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி நீதிமன்ற உத்தரவின்பேரில் சுற்றுச்சுவா் கட்டப்படுவதாகத் தெரிவித்தனா். இதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.