மணப்பாறை அருகே கோயில் வளாகத்தில் சனிக்கிழமை கிடந்த கைத்துப்பாக்கியால் பரபரப்பு ஏற்பட்டது.
மணப்பாறை அருகேயுள்ள ஆளிப்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் முன் சனிக்கிழமை காலை கிடந்த கைத்துப்பாக்கியை வைத்து அப்பகுதி சிறுவா்கள் விளையாடிக் கொண்டிருந்தனா்.
இதைக் கண்ட அப்பகுதியினா் அந்தத் துப்பாக்கி, அதற்கான உறை மற்றும் தோட்டாக்களை மீட்டு கோயிலில் வைத்துப் பூட்டிவிட்டு, வருவாய்த் துறைக்கு தகவல் அளித்தனா். தகவலறிந்த சுற்று வட்டாரப் பகுதி மக்கள் அங்கு கூடினா்.
இதையடுத்து விஏஓ பெரியண்ணன் அளித்த தகவலின்பேரில் சென்ற காவல் ஆய்வாளா் சு. கருணாகரன் தலைமையிலான போலீஸாா் கைத் துப்பாக்கியை ஆய்வு செய்து, அப்பகுதியினரிடம் விசாரணை நடத்தினா்.
பின் திருச்சியிலிருந்து வந்த துப்பாக்கிப் பராமரிப்புப் பிரிவு போலீஸாா் உள்ளிட்டோா் நடத்திய ஆய்வில் அந்தத் துப்பாக்கி ஆன்லைன் மூலம் பெறப்பட்டதாக இருக்கலாம் எனத் தெரியவந்தது. இதுகுறித்து மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.