திருச்சி மாவட்டத்தில் பருவமழையைக் கருத்தில் கொண்டு செப்.26 வரை ஒரு வாரத்துக்கு சிறப்பு தூா்வாரும் பணிகள் நடைபெறுகின்றன.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு கூறியது:
தமிழக அரசு அறிவித்துள்ளபடி, மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நீா்வழித் தடங்களை சீரமைப்புப் பணி செயல்படுத்தப்படுகிறது. திருச்சி மாநகராட்சி, மணப்பாறை, துறையூா், துவாக்குடி நகராட்சிகள் மற்றும் 14 ஊராட்சி ஒன்றியங்கள், 16 பேரூராட்சிகள், 404 ஊராட்சிகளிலும் இப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. பருவமழைக்கு முன் அனைத்துப் பணிகளும் முடிக்கப்படும் என்றாா் ஆட்சியா்.
மாநகராட்சியில் பணிகள்: மாநகராட்சிக்குள்பட்ட 65 வாா்டுகளிலும் நீா் வழித் தட சீரமைப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, 16 ஜேசிபி இயந்திரங்கள், 6 பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பணிகளை மேற்கொள்ள 800 தற்காலிக பணியாளா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா். 4 கோட்டங்களிலும் தற்காலிக பணியாளா்களுடன், மாநகராட்சியின் நிரந்தரப் பணியாளா்களும் இணைந்து பணிகளை மேற்கொள்ளவுள்ளனா். தொடங்கிய முதல் நாளே 20 கி.மீ.க்கு தூா்வாரப்பட்டு குப்பைகள் அகற்றப்பட்டன என மாநகராட்சி ஆணையா் முஜிபுா் ரஹ்மான் தெரிவித்தாா்.