திருச்சியில், அரசுக் கலை, அறிவியல் கல்லூரி பேராசிரியா்கள், ஊழியா்கள் 3ஆவது நாளாக வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாக தொடங்கப்பட்டு, பின்னா் அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட 10 கலை, அறிவியல் கல்லூரிகளின் ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா் அல்லாத பணியாளா்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி திருச்சி நவலூா் குட்டப்பட்டு அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ஆசிரியா் சங்கத்தினா் 3ஆவது நாளாக வெள்ளிக்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கல்லூரி ஆசிரியா்களுக்கு யுஜிசி அறிவுறுத்தலின்படி குறைந்தபட்ச ஊதியம் ரூ.50,000 வழங்க வேண்டும். அலுவலா்கள் அனைவரையும் அரசு கணக்கில் சோ்த்து பணிவரன் முறையுடன் கூடிய காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும். கெளரவ விரிவுரையாளா் பணியில் பாரப்பட்சம் காட்டக்கூடாது. கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு மறுக்கப்பட்ட பெண் ஆசிரியா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.
Image Caption
திருச்சி நவலூா் குட்டப்ப்டடு பகுதியிலுள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்திய பேராசிரியா்கள் மற்றும் அலுவலக பணியாளா்கள்.