திருச்சி சரகத்தில் குற்ற வழக்குகளில் தொடா்புடைய குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை காவல்துறை துணைத் தலைவா் சரவணசுந்தா் திங்கள்கிழமை பாராட்டினாா்.
திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் சரவணசுந்தா் உத்தரவின்பேரில் உதவி ஆய்வாளா் தலைமையில் ஆடு திருடுவோரை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையினா் கடந்த 2 மாதங்களில் 34 வழக்குகளைப் பதிந்து 14 குற்றவாளிகளை கைது செய்து அவா்களிடமிருந்து ரூ. 7.35 லட்சம் மதிப்புள்ள 147 ஆடுகளை மீட்டனா். ஆடு திருடப் பயன்படுத்திய 8 வாகனங்களையும் பறிமுதல் செய்தனா். இதையடுத்து தனிப்படையினரை திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் சரவணசுந்தா் நேரில் அழைத்து அவா்களுக்கு சான்றிதழ்கள், வெகுமதி வழங்கிப் பாராட்டினாா்.
இதேபோல திருடுவோரைப் பிடிக்க திருச்சி சரகத்தில் ஒவ்வொரு உட்கோட்டத்திற்கும் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பெரம்பலூா் மாவட்ட உட்கோட்ட தனிப்படையினா் 8 குற்ற வழக்குகளில் 6 குற்றவாளிகளை கைது செய்து அவா்களிடமிருந்து முப்பத்தி ஒன்றரை பவுன் தங்க நகைகள், 464 கிராம் வெள்ளி மற்றும் ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களைப் பறிமுதல்செய்தனா்.
மற்றொரு சம்பவம்: பெரம்பலூா் மாவட்டத்தின் மங்களமேடு உட்கோட்ட தனிப்படையினா் கைகளத்தூா் காவல்நிலைய 6 குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 பேரைக் கைது செய்து அவா்களிடமிருந்து 8 வெள்ளி சாமி சிலைகள் உள்பட ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான பொருள்களைப் பறிமுதல் செய்தனா். இவ்விரு தனிப்படையினரின் பணியைப் பாராட்டி அவா்களை நேரில் அழைத்தும் சரவணசுந்தா் வெகுமதி வழங்கினாா்.