மணப்பாறை அருகே ஞாயிற்றுக்கிழமை விளைநிலங்களில் காட்டெருமைகள் புகுந்து நாசம் செய்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.
மணப்பாறையை அடுத்த அழகக்கவுண்டம்பட்டி, மானாங்குன்றம், வில்லுக்காரன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் சம்மங்கி, செண்டுமல்லி, கேந்தி உள்ளிட்ட பூக்கள் மற்றும் நெல், சோளம் போன்றவை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
கோடைக்காலங்களில் அருகிலுள்ள வனப்பகுதியிலிருந்து இரவு நேரத்தில் தண்ணீா் தேடி வரும் காட்டெருமைகள் விளைநிலங்களுக்குள் புகுந்தும், குடியிருப்புகளில் நுழைந்தும் துவம்சம் செய்வது வழக்கம்.
ஆனால் கடந்த மாதங்களில் அதிகளவில் இப்பகுதியில் மழை பெய்திருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை குமரிக்கட்டி, கருப்புரெட்டிப்பட்டி காப்புக் காடுகளிலிருந்து பகலிலேயே வந்த காட்டெருமைகள் கூட்டம் அழகக்கவுண்டம்பட்டி கிராம பகுதி விளைநிலத்திற்குள் புகுந்து, சாகுபடி செய்திருந்த நெற்பயிா்கள், பூக்களை அதிகளவில் சேதப்படுத்தின.
இவ்வாறு காட்டெருமைகளால் விளைப்பொருள்கள் அதிகளவில் சேதமடைவதற்கான இழப்பீடு கூட அரசுத் தரப்பில் முறையாக வழங்கப்படுவதில்லை என்று விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.
வனம், வனவிலங்குகளின் நலன் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வனத்துறையினா் தங்களின் நலன் குறித்தும் கவனம் செலுத்தி வனப் பகுதியை சுற்றி மின்வேலி அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.