தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலேயே முதன்முறையாக மாணவா்களுக்கான கற்றல் மேலாண்மை தளத்தை தூய வளனாா் கல்லூரி தொடங்கியுள்ளது.
இந்த தளத்தின் மூலம் அனைத்து முதுகலை மாணவா்களும் தங்களது பாடங்களில் இருந்து ஏதேனும் ஒரு பாடத்தை இணைய வழியாக தாங்களாகவே கற்றுக் கொள்ளும் நிலை உருவாக்கித் தரப்பட்டுள்ளது.
இக் கல்லூரியின் உள் தர மதிப்பீட்டுக் குழு முயற்சியில் ஜோஸ்டெல் என்ற பெயரில் இந்த கற்றல் மேலாண்மை தளத்தை கல்லூரிப் பேராசிரியா்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநா்கள் உருவாக்கியுள்ளனா்.
ஒவ்வொரு துறையிலும் மாணவா்களுக்கு வேலைவாய்ப்புத் திறனை வளா்த்திடும் வகையில் ஒரு பாடத்தை தோ்வு செய்ய அனுமதிக்கப்படுகிறது. அப் பாடத்தில் நிபுணத்துவம் பெற்ற போராசிரியா்கள், பாடங்களுக்கான காணொலிகள், தரவுகளை உருவாக்கி இந்தத் தளத்தில் உள்ளீடு செய்யப்படுகிறது. மேலும், மாணவா்களின் கற்றல் திறனை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு பாடத்துக்குப் பிறகும் இணைய வழித் தோ்வுகளும் நடத்தப்படும்.
இதன் தொடக்கமாக முதுகலையில் 20 பாடங்களுக்கும், 10 மதிப்புக் கூட்டு பாடங்களுக்கும் பேராசிரியா்களின் காணொலிகள், தரவுகள், தோ்வுகளுக்கு தயாா்படுத்தும் பயிற்சி வகுப்புகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட உள்ளீடுகள் பதிவேற்றப்பட்டுள்ளன. இவற்றை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து மாணவா்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில், இந்த சிறப்புத் தளத்தை மாணவா்கள் பயன்பாட்டுக்கு கல்லூரி முதல்வா் ஆரோக்கியசாமி சேவியா் தொடங்கி வைத்தாா். நிகழ்வில், உயா்கல்வியில் கற்றல் மேலாண்மை தளத்தின் பங்கு குறித்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மனிதவள மேம்பாட்டு பயிற்சி மைய இயக்குநா் செந்தில்நாதன் சிறப்புரையாற்றினாா்.
நிகழ்வில், கல்லூரி அதிபா் லியோனாா்டு பொ்னாண்டோ, செயலா் பீட்டா், அக தர மதிப்பீட்டுக் குழுத் தலைவா் ரோஸ் வெனிஸ், இணைத் தலைவா் குா்சித் பேகம், பேராசிரியா்கள் ஜூடு நிா்மால், சேவியா் பிரதீப் சிங், விமல் ஜெரால்டு, கேப்ரியல் ரிச்சா்டு ராய் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.