திருச்சி: சுதந்திர நாள் விழாவையொட்டி திருச்சி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து, சமூகப் பணியாற்றியவர்களுக்கும், மாசற்ற வகையில் அரசுத்துறைகளில் பணியாற்றியவர்களுக்கும் பாராட்டு சான்றுகள், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
திருச்சி, சுப்பிரமணியபுரம் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், சுதந்திர நாள் விழா இன்று காலை கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மூவர்ண பலூன்களையும், சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக வெண்புறாக்களையும் வானில் பறக்கவிட்டார். அதன் பின்னர் காவல்துறையினரில் அணிவகுப்பு மரியாதையும் ஏற்றுக்கொண்டார்.
நிகழ்வில் சிறந்த பணிகளை பாராட்டி பாராட்டு சான்றுகள் வழங்கப்பட்டன. குறிப்பாக அரசுத்துறைகளில் 25 ஆண்டுகள் மாசற்ற வகையில் பணியாற்றியவர்களுக்கும், விளையாட்டு துறையில் வெற்றிப் பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனையர் மற்றும் சமூக பணிகளில் சிறப்புடன் பணியாற்றியவர்கள் என மொத்தம் 318 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.
மேலும் 25 பேருக்கு ரூ. 25 லட்சத்து 41 ஆயிரத்து 532 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியர் வழங்கினார். தொடர்ந்து மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. கரோனா தொற்று பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக தடைபட்ட கலை நிகழ்ச்சிகள் நிகழாண்டு நடைபெற்றன. பார்வையாளர்களும் அனுமதிக்கப்பட்டனர்.