திருச்சி: மலேசியாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் முறைகேடாக கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கத்தை, காலணியில் மறைத்து வெளியே எடுத்துச் செல்லமுயன்ற விமான நிறுவன ஊழியரிடம் சுங்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபாய் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில், வியாழக்கிழமை காலை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த விமான நிலையத்தில் நின்றதை அடுத்து பயணிகள் வெளியேறிக் கொண்டிருந்தனர்.
சுங்கத்துறையினர் பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சோதனை செய்து கொண்டிருந்தனர். அந்த விமானத்தில் பயணம் செய்த புதுக்கோட்டையைச் சேர்ந்த பயணி ஒருவர் இருக்கையின் அடியில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
அவர் சமிக்ஞை செய்துவிட்டு வெளியே சென்றதும், விமான நிறுவன ஒப்பந்த பணியாளர் ஒருவர் விமானத்துக்குள்ளிருந்து, பயணியின் இருக்கை அடியிலிருந்த (பவுடர் வடிவிலான) தங்கத்தை அவரது காலணிகளுக்குள் (ஷூக்கள்) மறைத்து எடுத்து வந்துள்ளார்.
அதை பாதுகாப்பு பணியிலிரு்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வீரர் ஒருவர் கண்டறிந்து, அவரை சுங்கத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தார். சுங்கத்துறையினர் மேற்கொண்ட சோதனையில் அவர் காலணியின் உள்பகுதியில் அணியும் காலுறைக்குள்(சாக்ஸில்) மறைத்து, சுமார் 2 கிலோ மதிப்பிலான தங்கத்தை வெளியில் கொண்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.