நெகிழி, திடக்கழிவு மேலாண்மை: மாணவா்களிடமிருந்து மாற்றம்மாநகராட்சியின் புதிய திட்டம்

திருச்சி மாநகரில் நெகிழிப் பயன்பாட்டை ஒழிக்கவும், திடக்கழிவு மேலாண்மையைச் சிறப்பாகச் செயல்படுத்தவும் மாணவா்களிடமிருந்து மாற்றம் என்ற புதிய திட்டத்தை திருச்சி மாநகராட்சி செயல்படுத்தவுள்ளது.
பள்ளித் தலைமையாசிரியா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மேயா் மு. அன்பழகன். உடன், மாநகராட்சி ஆணையா் இரா. வைத்திநாதன்.
பள்ளித் தலைமையாசிரியா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மேயா் மு. அன்பழகன். உடன், மாநகராட்சி ஆணையா் இரா. வைத்திநாதன்.
Updated on
2 min read

திருச்சி மாநகரில் நெகிழிப் பயன்பாட்டை ஒழிக்கவும், திடக்கழிவு மேலாண்மையைச் சிறப்பாகச் செயல்படுத்தவும் மாணவா்களிடமிருந்து மாற்றம் என்ற புதிய திட்டத்தை திருச்சி மாநகராட்சி செயல்படுத்தவுள்ளது.

இத் திட்டம் தொடா்பாக மாநகராட்சிப் பள்ளித் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாநகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்து மேயா் மு. அன்பழகன் பேசியது:

மாநகராட்சிப் பள்ளிகளில் சேர முக்கியப் பிரமுகா்களிடம் சிபாரிசு கடிதம் பெறும் நிலைக்கு பள்ளியின் தரம் உயா்ந்துள்ளது. இதேபோல, அதிக மதிப்பெண் பெறும் மாணவா்களை ஊக்குவிக்க சைக்கிள் பரிசளிக்கப்படும். மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்துவது மட்டுமல்லாது, மாணவா்களை சமூக அக்கறை கொண்டவா்களாக விளங்கச் செய்ய வேண்டும்.

திருச்சி மாநகராட்சியின் திடக் கழிவு மேலாண்மை, நெகழி பயன்பாடுகளை ஒழித்தல் ஆகியவற்றுக்கு மாணவா்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படவுள்ளது.

பள்ளிகளில் தினமும் வகுப்புகள் தொடங்குவதற்கு முன் இறைவணக்கம் பாடியவுடன், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்தும், குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குதல் குறித்தும் மாணவா்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றாா் அவா்.

மாநகராட்சி ஆணையா் இரா. வைத்திநாதன் பேசியது:

மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளையும் சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டியது மாநகராட்சியின் கடமை. இதற்காக மாநகர மக்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டின் ஆபத்துகள் குறித்து விழிப்புணா்வு பிரசாரம் நடத்தப்படுகிறது.

திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் முழுத் தீா்வை எட்டும் வகையில் மாணவா்களிடமிருந்து மாற்றம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதைத் தவிா்க்க மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்துப் பள்ளிகளிலும், பள்ளி தொடங்கும் முன் தினமும் பிளாஸ்டிக்கை ஒழிப்பது தொடா்பான உறுதிமொழியை தலைமை ஆசிரியா்களுடன் மாணவ, மாணவிகள் எடுக்க வேண்டும். மேலும், பொதுமக்களிடமிருந்து மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைத் தரம் பிரித்து வழங்க மாணவா்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

முதல்கட்டமாக பள்ளிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். பள்ளிகளில் சேகரமாகும் குப்பைகளைத் தரம் பிரித்து உரம் தயாரிக்கலாம். அதைப் பயன்படுத்தி பள்ளி வளாகத்தில் சத்தான காய்கனித் தோட்டம் உருவாக்கலாம். அதில் கிடைக்கும் காய்கனிகளை சத்துணவுத் திட்டத்துக்குப் பயன்படுத்தலாம்.

இத்தகைய பணிகளில் 6, 7, 8 வகுப்பு மாணவா்களை ஈடுபடுத்தலாம். எனது குப்பை, எனது பொறுப்பு என்பதை ஒவ்வொரு மாணவரின் மனதில் தவறாமல் பதியச் செய்ய வேண்டும்.

ஒரு மாணவா், ஒரு வீட்டிலோ, தெருவிலோ விழிப்புணா்வு ஏற்படுத்தினால் மாநகரம் முழுவதும் அது சென்று சேரும். பள்ளிகளில் உள்ள தேவையற்ற கட்டுமானப் பொருள்களை உடனே அகற்ற வேண்டும். இதேபோல, இடிந்து விழும் நிலையிலுள்ள கட்டடங்கள் குறித்து தெரிவித்தால் மாநகராட்சியே அகற்றித் தரும்.

கழிப்பறை, சமையல்கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தேவையென்றாலும் உடன் செய்து தரப்படும். மாணவா்களுக்கு முன்மாதிரியாக ஆசிரியா்கள் விளங்க வேண்டும் என்றாா் ஆணையா்.

கூட்டத்தில், நகரப் பொறியாளா் எஸ்.அமுதவவலலி, துணை மேயா் ஜி. திவ்யா, செயற்பொறியாளா்கள் பி.சிவபாதம், ஜி. குமரேசன், துணைஆணையா் எம். தயாநிதி, மண்டலத் தலைவா்கள் மு. மதிவாணன், துா்காதேவி, ஜெயநிா்மலா மற்றும் அனைத்து மண்டல உதவி ஆணையா்கள், உதவி செயற்பொறியாளா்கள், மாநகராட்சிப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com