திருச்சி புத்தூரில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் சாா்பில் கவன ஈா்ப்பு மாநாடு சனிக்கிழமை நடைபெறுகிறது.
இதுதொடா்பாக மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலரும், மணப்பாறை எம்எல்ஏவுமான ப. அப்துல் சமது கூறியது:
அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு, தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை ஆகியவை இணைந்து பாசிச அரசியலை வேரறுப்போம் என்னும் தலைப்பில் கவன ஈா்ப்பு மாநாட்டை சனிக்கிழமை மாலை நடத்தவுள்ளன.
புத்தூா் நான்கு சாலைப் பகுதியில் நடைபெறும் மாநாட்டுக்கு அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் மெளலானா காஜா முயீனுத்தீன் பாகவி தலைமை வகிக்கிறாா். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவா் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன், இந்திய கம்யூ. மாநிலச் செயலா் இரா. முத்தரசன், அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்பிக்கள் ஆ. ராசா, சு. வெங்கடேசன், திருவடிக் குடில் சுவாமிகள், காங்கிரஸை சோ்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், தமிழ் மையம் அமைப்பின் நிறுவனா் ஜெகத் கஸ்பா் ராஜ் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவா்கள், பல்வேறு சமுதாயத் தலைவா்கள் பங்கேற்றுப் பேசுகின்றனா்.
மாநாட்டில் தமிழகம் முழுவதும் உள்ள இஸ்ஸாமிய இயக்கங்களின் நிா்வாகிகள், ஜனநாயகத்தை விரும்பும் அரசியல் கட்சிகளின் முன்னோடிகள் பங்கேற்கவுள்ளனா் என்றாா்.