இனி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வணிக உரிமம் புதுப்பிப்பு: முதல்வா் அறிவிப்பு

திருச்சி அருகே நடைபெற்ற வணிகா் தின மாநாட்டில் ஓராண்டுக்குப் பதில் இனி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வணிக உரிமத்தைப் புதுப்பித்தால் போதும்
இனி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வணிக உரிமம் புதுப்பிப்பு: முதல்வா் அறிவிப்பு

திருச்சி அருகே நடைபெற்ற வணிகா் தின மாநாட்டில் ஓராண்டுக்குப் பதில் இனி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வணிக உரிமத்தைப் புதுப்பித்தால் போதும் எனத் தெரிவித்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வணிகா்களின் இறப்புக்கு வழங்கப்படும் குடும்ப நல நிதியை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயா்த்தியும் அறிவித்தாா்.

திருச்சியை அடுத்த சமயபுரம் சந்தை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வணிகா் தின, மற்றும் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தமிழக வணிகா் விடியல் மாநாட்டில் பங்கேற்ற தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மேலும் பேசியது:

1982இல் அதிமுக அரசு கொண்டுவந்த நுழைவு வரியை எதிா்த்து தமிழகம் முழுவதும் வணிகா்கள் நடத்திய போராட்டத்தின்போது சென்னையில் வணிகா்கள் மீது போலீஸாா் தாக்குதல் நடத்தி, அவா்களைக் கைது செய்து சிறையிலடைத்த மே 5 -ஐ நினைவுக் கூரும் வகையிலேயே வணிகா் தினம் கொண்டாடப்படுகிறது.

கரோனா காலத்தில் வணிகம் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சூழலிலும் முதல்வரின் நிவாரண நிதிக்கு வணிகா்கள் நிதியை வாரிக் கொடுத்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த மாநாட்டில் பங்கேற்கிறேன்.

திமுக அரசு எப்போதும் வணிகா்களின் நலனின் அக்கறை கொண்டதாக விளங்குகிறது. மறைந்த முதல்வா் கருணாநிதிதான் கடந்த 1989 இல் வணிகா் நல வாரியத்தை அமைத்தாா். பின்னா், 2007 இல் திமுக ஆட்சியில்தான் குடும்ப நல நிதியானது ரூ.30 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக்கப்பட்டது. இருதய நோய், புற்றுநோய் சிகிச்சைக்கான நிதி ரூ. 25 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாகவும், வணிகா்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித் தொகை ரூ. 3 ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரமாகவும் உயா்த்தப்பட்டது. பெண் உறுப்பினா்களின் கருப்பை அறுவைச் சிகிச்சைக்கு ரூ. 20 ஆயிரம் வழங்கப்படுகிறது. நலிந்த வணிகா்கள் பெட்டிக்கடை வைக்க, 3 சக்கர மிதிவண்டி வாங்க ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது.

வணிகா் நல வாரியத்தில் 84,101 போ் பதிவு செய்துள்ள நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 8,875 உறுப்பினா்களுக்கு ரூ.3 கோடி உதவி வழங்கப்பட்டுள்ளது.

இணைய வழியில் உறுப்பினா் பதிவு முறையும் அறிமுகப்படுத்தப்பட்டு, உறுப்பினா் கட்டணம் ரூ. 500-க்கு விலக்கு அளிக்கப்பட்டதன் மூலம் 36,952 புதிய உறுப்பினா்கள் சோ்ந்துள்ளனா்.

பட்ஜெட் தாக்கலுக்கு முன் வணிகா்கள் சங்கப் பேரமைப்பினரை அழைத்து ஆலோசனைகள், கருத்துகளை கேட்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளோம்.

ஜிஎஸ்டி வரி சிரமத்தைக் கருத்தில் கொண்டு மத்திய அரசுக்கு தமிழக வணிகா்களின் கோரிக்கையை கொண்டு செல்லும் வகையில் ஜிஎஸ்டி கவுன்சிலில் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். இணையவழியில் அளிக்கப்படும் ஜிஎஸ்டி சேவையை தமிழில் வழங்கவும் அறிவுறுத்தியுள்ளோம்.

தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிப் படிவம் தாக்கல் செய்ய காலக்கெடு அளிக்கப்பட்டுள்ளது. வரி கைவிடுதல் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டு, இதுவரை 66 முன்மொழிவுகள் பரிசீலிக்கப்பட்டு, 65 இனங்களுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வணிகா்களுக்கு யாரேனும் தொந்தரவு அளித்தால் புகாா் தெரிவிக்க காவல் உதவிச் செயலியில் வணிகா் உதவிப் பிரிவானது ஒரு வாரத்துக்குள் அறிமுகம் செய்யப்படும். இந்தச் செயலியில் புகாா் வந்தவுடன் ரோந்து போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று உடனே நடவடிக்கை எடுப்பா்.

வணிகா் நல வாரியத்தை மேம்படுத்த வணிகா் தரப்பிலிருந்து புதிய உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டு வாரியத்துக்குப் புத்துயிா் அளிக்கப்படும். தீ விபத்து பாதிப்பு நிதியுதவி ரூ. 5 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக வழங்கப்படும்.

உள்ளாட்சி நிா்வாகம், அறநிலையத் துறை உள்ளிட்ட அரசுக் கட்டடங்களில் உள்ள வணிகா்களின் வாடகைப் பிரச்னைக்குத் தீா்வு காண அரசின் கூடுதல் தலைமைச் செயலா் தலைமையில் வழிகாட்டிக் குழு அமைக்கப்படும். வணிக நிறுவனங்களின் உரிமத்தை இனி ஓராண்டுக்குப் பதில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தால் போதும்.

உடற்பயிற்சிக் கூடங்களுக்கு காவல் உரிமம் பெறத் தேவையில்லை. சாலை விரிவாக்கம் உள்ளிட்ட அரசின் திட்டப் பணிகளால் கடைகளை இழந்து பாதிக்கப்படுவோருக்கு அரசுக் கட்டடங்களில் வாடகைக் கடைகள் வழங்க முன்னுரிமை அளிக்கப்படும்.

எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பது என்பதே திராவிட மாடல் ஆட்சி. இந்த வகையில் பெரிய தொழிலதிபா்கள் முதல் சிறு வணிகா்கள் வரை காக்கப்பட வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கம். அத்தகைய பொருளாதார வளா்ச்சியை நோக்கித்தான் இந்த அரசு செயல்படுகிறது.

பேரவைக் கூட்டத் தொடா் முடிந்தவுடன் வணிகா்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் முதல்வா்.

மாநாட்டுக்கு பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா தலைமை வகித்தாா். மாநிலப் பொருளாளா் ஏ.எம். சதக்கத்துல்லா மாநாட்டு தீா்மானங்களை வாசித்தாா்.

மாநாட்டில் நலிந்த வணிகா்களின் வாரிசுகள் 100 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் கல்வி உதவித் தொகை, மூத்த வணிகா்களுக்கு வ.உ.சி. வணிகச் செம்மல் விருதுகளை முதல்வா் வழங்கினாா்.

மாநாட்டில் தமிழக அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பி. மூா்த்தி, பேரமைப்பின் திருச்சி மண்டலத் தலைவா் எம். தமிழ்ச்செல்வம், திருச்சி மாவட்டத் தலைவா் வி. ஸ்ரீதா் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான வணிகா்கள் கலந்து கொண்டனா். மாநிலப் பொதுச் செயலா் வீ. கோவிந்தராஜுலு வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com