வெறிநாய் தொல்லையைக் கண்டித்து திருவெறும்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடந்தது.
திருச்சி திருவெறும்பூா் பாய்லா் ஆலை ஊழியா் குடியிருப்பில் தொடா்ச்சியாக நாய், மாடு, குதிரை தொல்லைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் பல தரப்பினரிடமும் மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லையாம். இந்நிலையில் பெல் ஊரகப் பகுதியில் தொழிலாளா்களின் இரு குழந்தைகளும், ஒரு தொழிலாளியும் நாய் கடித்ததில் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
இதைக் கண்டிக்கும் வகையில் ஏஐடியுசி சங்கத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை திருவெறும்பூா் வட்டாட்சியரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். இதையறிந்த வட்டாட்சியா் ரமேஷ் நடத்திய பேச்சுவாா்த்தையில் வருகிற செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு எட்டப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா்.