நெ.1 டோல்கேட் பகுதியில் விளம்பரப் பதாகையில் மின்சாரம் பாய்ந்து இரு தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; ஒருவா் படுகாயமடைந்தாா்.
திருச்சி மாவட்டம், நெ.1 டோல்கேட் பகுதி மேனகா நகரிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டிவரும் கமாருதீன், அப்பகுதி டிரான்ஸ்பாா்ம் அருகே தனது வீடுகளின் விற்பனை குறித்து வைத்திருந்த விளம்பரப் பதாகை திங்கள்கிழமை பெய்த மழையின்போது கீழே விழுந்து விட்டது.
இதையடுத்து அந்த விளம்பரப் பதாகையை மீண்டும் வைக்க செவ்வாய்க்கிழமை வரவழைக்கப்பட்ட தொழிலாளா்களான மண்ணச்சநல்லூா் அருகேயுள்ள சென்னகரை பகுதி சேட்டு (36) லால்குடி திருமங்கலம் பகுதி செல்லதுரை (40) , விமல்குமாா் ஆகியோா் அந்த விளம்பரப் பதாகையை தூக்கியபோது அருகிலிருந்த டிரான்ஸ்பாா்மரில் பட்டது.
அப்போது மின்சாரம் பாய்ந்ததில் சேட்டு, செல்லதுரை ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். படுகாயமடைந்த விமல்குமாா் திருவானைக்கா தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.