மணப்பாறை அருகே கோவில் திருவிழாவில் சாமி சிலைகள் பிரமாண்டமாக அணிவகுத்து வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பொன்முச்சந்தி அருகே காரிய சித்தி தரும் ஆரிய பாப்பாத்தியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வைகாசி திருவிழா இரண்டு நாள்கள் நடைபெறும் நிலையில் முதல் நாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் மணப்பாறை காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு பின் சாமி ஊர்வலம் புறப்பட்டது.
மின்னொலியில் அலங்கரிக்கப்பட்ட தேர் பின்னே வர அதன் முன்னதாக காளி, அனுமன், சிவன், விஸ்ணு, சிங்கம் உள்ளிட்ட பிரமாண்டாமான 5 சிலைகள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்வலமாக வந்தன. செண்டைமேளம், மங்கள வாத்தியம் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் பிரமாண்டமாய் காட்சி அளித்த சாமி சிலைகளை அனைவரும் பார்த்து மகிழ்ந்தனர்.
மணப்பாறையிலிருந்து புறப்பட்டு 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற ஊர்வலம், பின்னர் கோவிலை சென்றடைந்தது. பின்னர் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, ஆராதனை நடைபெற்றது.