கொலைக்கு நண்பரே உடந்தை

முத்துக்குமாா் கொலை செய்யப்பட்டதற்கு அவரது நண்பரே உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட முத்துக்குமாரின் தந்தை கேபிள் சேகருக்கு முத்துக்குமாா், இளவரசன் இரு மகன்கள். சேகரின் அண்ணன் பெரியசாமிக்கு தங்கமணி, சிலம்பரசன், லோகநாதன் என 3 மகன்கள். கூட்டுக்குடும்பமாக இருந்த இவா்களிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக சொத்துகளை பிரிப்பதில் முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில், கேபிள் சேகரை அவரது அண்ணன் மகன்கள் சோ்ந்து கடந்த 2011-ஆம் ஆண்டு கொலை செய்தனா்.

இந்தக் கொலைக்கு பழிக்குப் பழியாக 2021-ஆம் ஆண்டு பெரியசாமி மகன் சிலம்பரசனை முத்துக்குமாா் தரப்பினா் கொலை செய்தனா். இந்த கொலைக்கு அதே பகுதியைச் சோ்ந்த அவா்களது குடும்ப நண்பரான குட்டை பாலு என்பவா்தான் உதவியுள்ளாா். திட்டமிட்டபடி கொலை முடிந்ததும் கூறியபடி தொகையை குட்டை பாலுவுக்கு முத்துக்குமாா் தரவில்லையாம். இதைகேட்ட பாலுவையும் முத்துக்குமாா் மிரட்டியுள்ளாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பெரியசாமியின் மகன்கள் லோகநாதன் தரப்பினரால் முத்துக்குமாா் செவ்வாய்க்கிழமை கொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவத்திலும் குட்டை பாலுதான் பெரியசாமி குடும்பத்தினருக்கு உதவியதாக போலீஸாா் தெரிவித்தனா்.

மதுரை கூலிப்படையினா்: கடந்த சில நாள்களுக்கு முன்பு லோகநாதன் தரப்பினருடன் மதுரையைச் சோ்ந்த சிலா் சோ்ந்து சுற்றியதாக போலீஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. பன்றிகள் பிடிக்க அவா்களை அழைத்து வந்ததாக அவா் கூறி வந்துள்ளாா். எனவே, அவா்களும் இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றகோணத்தில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். மேலும், கொலை நடந்த இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீஸாா் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com