![விஜய் சிவா: உயர்தரம் என்றும் நிரந்தரம்](http://media.assettype.com/dinamani%2Fimport%2F2014%2F12%2F19%2F18%2Foriginal%2Fvijay%20siva.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
உயர்ந்த குருவும் உத்தம சீடனும் ஒருவொருக்கொருவர் அமைவது தெய்வ சங்கல்பம் என்று ராமாயண காலமான த்ரேதாயுகத்திலிருந்து அறியப்பட்ட நியதி. வால்மீகி தனது முதல் ராமாயண ஸ்லோகமான 'தபஸ்வாத்யாய நிரதம் தபஸ்வீ வாக்விதம் வரம்’ என்று தொடங்குவதற்கு முன் நாரதரைச் சந்தித்தது இப்படித்தான். இது போல தான் இசை மேதை டி கே ஜெயராமன் இசை பேரொளி விஜய் சிவாவை அடையாளம் கண்டிருக்க வேண்டும்.
விஜய் சிவாவின் ஒவ்வொரு இசை கச்சேரியும் வேதாப்யாசம் செய்வது போல தான். அதற்கேற்றார் போல் ஆண்டின் கடைசி தினத்தில் கிருஷ்ணா கான சபாவில் ' குரு லேக இட்டு வன்ட்டி' என்று கௌரி மனோஹரியில் கச்சேரியை துவக்கினார். அடுத்து 'மாபால வெலசிகா ' என்று தியாகராஜ சுவாமிகளின் பிரபலமான அசாவேரி கீர்த்தனை.
சுகந்தி குந்தலாம்பா சமேதராய் ஸ்ரீ மாத்ருபூதேஸ்வரரை முத்துஸ்வாமி தீட்சிதர் அனுக்ரஹத்தோடு கன்னட ராகத்தில் தரிசித்தார் . ‘வாசுதேவமஹிதம் பவத்ரனத்தில்’ அழகான நிரவல் .
வானிலை அறிக்கை பற்றி அவர் கவலைப்படவில்லை.அவரது இசை புயல் சியாமா சாஸ்த்ரி துணையுடன் நாகப்பட்டிணம் சென்று நீலாய தாக்ஷியிடம் தஞ்சம் புகுந்தது . பரஸ் போன்ற ராகங்கள் ஜாவளிகளில் தான் அதிகம் கேட்டிருக்கிறோம். விஸ்தாரமாக ராகம் பாடியது சிறப்பு.
வாராது போல் வந்த வராளியில் கோபாலக்ருஷ்ண பாரதியின் 'ஆடிய பாதமே கதி' யில் உதித்த கற்பனை ஸ்வரங்களுக்கு சந்திரரும் சூர்யரும் தடுமாற, நாரதரும் துன்புருவும் மனம் மகிழ,நந்தி மத்தளம் கொட்டினார். ஃப்ளாஷ் மின்னல் போல் ஒரு புஷ்பலதிகாவில் 'இகநைன மொர'.
அன்றைய முக்கிய ராகம் காம்போதி.தியாகராஜரின் ' ஸ்ரீ ரகுவர அப்ப்ரமேய கீர்த்தனை. பழமையான இந்த ராகத்தை கையாண்ட விதம் மிகப் புதுமையாக இருந்தது. ராக சஞ்சாரத்தில் மேலிருந்து கீழே இறங்கி வர அவருக்கே மனம் இருக்கவில்லை. அரங்கில் அப்ளாஸ் அடங்க வெகு நேரம் ஆயிற்று. சிவா கூட அப்படி பட்ட ஒரு வரவேற்பை பார்த்து வயலின் வாசித்தவரிடம் கண்ணசைத்து பிரமிப்பை வெளிபடுத்தினார். குறிப்பாக ஸ்வரங்கள் க ..ம ப ம க .......... ரி க ச ரி க.... க . சர்வ இலகுவில் சகோதரர் மனோஜ் சிவா, கடத்தில் எஸ் வி ரமணி, கூட்டணி தர்மத்துடன் வயலினில் லால்குடி பள்ளியின் விட்டல் ராமமூர்த்தி ஆஹா!!!! பேரானந்தம்.!!!.. காதுகளுக்கு மோட்சம்.
வாசுதேவாச்சாரின் ' பஜரே ரே மானச (கர்நாடக தேவகாந்தாரி)' '' இந்த ரத்தினத்தில்,' ராஜகுமாரம் ...... ராமம்' நெகிழ்வான இந்த இடத்தை சங்கீத ரசிகர்கள் அனுபவிக்காமல் இருக்க முடியாது.
சுந்தரி என் சொப்னத்தில் வந்தது யார் என்ற சங்கர சிவனின் கமாஸ் ராக பாடல். பின்னர் நேயர் விருப்பமாக 'காண வேண்டாமோ '.. தாசர்வாளின் தேவர் நாமாவில் செஞ்சுருட்டி, புன்னாகவராளி,சிந்து பைரவி ராகமாலிகை . நிறைவாக பெஹாக்கில் ஒரு விருத்தம் பாடி கற்பகமே…. கண் பாராய்.. .... தத்துவமசி என்ற மஹா வாக்கியத்துடன் திருமயிலை கற்பகத்திடம் வேண்டினார்..
இன்றைய கச்சேரியில் இருந்த பங்கீடு குறிப்பிடதக்கது. பல வருடங்களாக விஜய் சிவாவின் இசையைக் கேட்டு வருகிறோம். ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு ' கிளாஸ் இஸ் பர்மெனெண்ட்'. ஆம் .. உயர்தரம் என்றும் நிரந்தரம்!