அந்நிய முதலீட்டாளர்கள் சென்ற நவம்பரில் பங்குச் சந்தைகளில் மேற்கொண்ட முதலீடு 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது.
இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: பொதுத் துறை வங்கிகளுக்கு மறுமூலதனம் அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது, எளிதாக தொழில் தொடங்கக் கூடிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் தரத்தை உலக வங்கி கிடுகிடுவென உயர்த்தியது உள்ளிட்ட நிகழ்வுகள் அந்நிய முதலீட்டாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இதன் காரணமாக, சென்ற நவம்பரில் இந்திய பங்குச் சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்கள் ரூ.19,728 கோடி மதிப்பிலான தொகையை முதலீடு செய்தனர். இதற்கு முன்பு கடந்த மார்ச் மாதத்தில்தான் அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் மிகவும் அதிகபட்சமாக ரூ.30,906 கோடியை முதலீடு செய்திருந்தனர். அதையடுத்து, 8 மாத இடைவெளிக்குப் பிறகு, சென்ற நவம்பரில்தான் பங்குச் சந்தைகளில் அவர்களின் முதலீடு இந்த அளவுக்கு உயர்வைக் கண்டுள்ளது.
மேலும், அந்நிய முதலீட்டாளர்களில் ஒரு பிரிவினர் கடன்பத்திர சந்தையில் சென்ற நவம்பரில் ரூ.530 கோடியை முதலீடு செய்தனர்.
அந்நிய முதலீட்டாளர்கள் நடப்பு ஆண்டில் இதுவரையில் பங்குகளில் ரூ.53,800 கோடியும், கடன்பத்திர சந்தைகளில் ரூ.1.46 லட்சம் கோடியும் முதலீடு செய்துள்ளதாக அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.