மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 245 புள்ளிகள் அதிகரித்தது.
அமெரிக்க மத்திய வங்கியின் கூட்டத்தில் வட்டி விகிதங்களை உயர்த்துவதில் நிலவிய நிச்சயமற்ற தன்மை; டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.
தகவல் தொழில்நுட்பம் தவிர இதர துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளில் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முதலீடு மேற்கொண்டனர். இதையடுத்து, அத்துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சராசரியாக 3 சதவீதம் வரை உயர்ந்தன.
அதானி போர்ட்ஸ் பங்கின் விலை அதிகபட்சமாக 4.88 சதவீதம் அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து, டாடா ஸ்டீல் பங்கின் விலை 3.47 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் பங்கின் விலை 3.18 சதவீதமும், ஓ.என்.ஜி.சி. பங்கின் விலை 2.73 சதவீதமும் உயர்ந்தன. இவை தவிர, பவர் கிரிட் (2.50%), ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி (2.41%), மாருதி சுஸுகி (2.28%) ஆகிய நிறுவனப் பங்குகளும் கணிசமான ஏற்றத்தைக் கண்டன.
இருப்பினும், டி.சி.எஸ்., எச்.டி.எப்.சி. வங்கி மற்றும் இன்ஃபோசிஸ் பங்குகளின் விலை 1.85 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன.
மிட்-கேப் நிறுவனப் பங்குகளின் விலை 1.32 சதவீதமும், ஸ்மால்-கேப் நிறுவனப் பங்குகளின் விலை 0.98 சதவீதமும் அதிகரித்தன. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் 26 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 4 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் காணப்பட்டன.
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 245 புள்ளிகள் அதிகரித்து 26,878 புள்ளிகளாக நிலைத்தது. இரண்டு மாதங்களில் காணப்படாத அதிகபட்ச அளவாகும் இது.தேசிய பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 83 புள்ளிகள் உயர்ந்து 8,273 புள்ளிகளாக நிலைத்தது.