தனியார் துறையைச் சேர்ந்த இன்டஸ்இண்ட் வங்கியின் மூன்றாம் காலாண்டு லாபம் 29 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்த வங்கி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2016-17-ஆம் நிதி ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் இன்டஸ்இண்ட் வங்கி ரூ.4,716.1 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.3,766.7 கோடியாக இருந்தது.
வருவாய் சிறப்பான அளவில் அதிகரித்ததையடுத்து, வங்கியின் நிகர லாபம் ரூ.581.02 கோடியிலிருந்து 29.1 சதவீதம் அதிகரித்து ரூ.750.6 கோடியாக இருந்தது.
வங்கி வழங்கிய மொத்த கடனில் 0.82 சதவீதமாக இருந்த மொத்த வாராக் கடன் விகிதம் அதிகரித்து 0.94 சதவீதமாக காணப்பட்டது. அதேபோன்று, நிகர வாராக் கடன் விகிதமும் 0.33 சதவீதத்திலிருந்து அதிகரித்து 0.39 சதவீதமாக இருந்தது என்று இன்டஸ்இண்ட் வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.