மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் 204 புள்ளிகள் சரிந்தன.
முந்தைய மூன்று வாரங்களில் பங்குச் சந்தையில் சிறிய அளவு லாபகரமாக செயல்பட்ட நிலையில், கடந்த வாரம் இழப்பில் முடிவுற்றது. சென்செக்ஸ் முந்தைய மூன்று வாரங்களில் 1,197 புள்ளிகள் உயர்வைக் கண்டது. இது 4.6 சதவீதம் கூடுதலாகும். அமெரிக்க அதிபர் பதவி ஏற்கும் டொனால்ட் டிரம்ப்பின் கொள்கைகள் குறித்து முதலீட்டாளர்களின் மன நிலையில் ஏற்பட்ட தயக்கம் உலகம் முழுவதும் உள்ள பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது.
வார அளவில் நோக்கும்போது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்கு விற்பனை மதிப்பைவிட முதலீட்டு மதிப்பு கூடுதலாக இருந்தது. எனினும் வர்த்தகம் நடைபெற்ற கடைசி மூன்று நாட்களில் அவர்கள் கூடுதல் விற்பனையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் நிகர அளவில் ரூ. 630.44 கோடி மதிப்பிலான பங்குகளில் முதலீடு செய்தனர்.
எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை, மருத்துவத் துறை, தகவல் தொழில்நுட்பம், தொழில்நுட்பத் துறை, பொதுத் துறை, உலோகம், மூலதனப் பொருள் துறை, வங்கி, மின்சாரம், ஆட்டோ மொபைல், வீட்டு வசதித் துறை ஆகியவற்றைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்கு விலை பெரும் இழப்பை சந்தித்தன.
எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறைப் பங்கு விலை சராசரியாக 1.33 சதவீதம் சரிந்தன. வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள் துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்கு விலை சராசரியாக 1.87 சதவீதம் அதிகரித்தது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை 5.91 சதவீதம் சரிந்தது. ஆக்சிஸ் வங்கியின் பங்கு விலை 4.75 சதவீதம் நஷ்டம் அடைந்தது. ஹிந்துஸ்தான் யுனிலீவர் பங்கு விலை 4 சதவீதம் அதிகரித்தது. சென்செக்ஸில் இடம்பெற்ற முப்பது நிறுவனங்களில் 18 நிறுவனங்களின் பங்கு விலை இழப்பை சந்தித்தன. பன்னிரண்டு நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் ரூ. 14,989.40 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.
தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி முந்தைய மூன்று வாரங்களில் 414 புள்ளிகள் உயர்வைக் கண்டது. இது 5.19 சதவீத வளர்ச்சியாகும். சென்ற வாரம் தேசிய பங்குச் சந்தையில் ரூ. 89,837.62 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.