பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் வங்கி மூன்றாம் காலாண்டில் ரூ.373 கோடி நிகர லாபம் ஈட்டியது.
இதுகுறித்து அந்த வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான மகேஷ் குமார் ஜெயின் கூறியதாவது:
நடப்பு 2016-17 நிதி ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் இந்தியன் வங்கியின் இதர வருவாய் ரூ.600 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய இதர வருவாய் ரூ.439 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 37 சதவீதம் அதிகமாகும்.
நிகர வட்டி வருவாய் 12 சதவீதம் உயர்ந்து ரூ.1,247 கோடியாக இருந்தது.
இதர வருவாய் சிறப்பான அளவில் அதிகரித்ததையடுத்து, நிகர லாபம் ரூ.42 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.373 கோடியாக காணப்பட்டது. செயல்பாட்டு லாபம் ரூ.761 கோடியிலிருந்து 34 சதவீதம் வளர்ச்சி அடைந்து ரூ.1,021 கோடியாக இருந்தது.
உயர் மதிப்பு கரன்ஸி வாபஸ் பெறப்பட்டதன் பயனாக, நீண்ட காலம் நிலுவையில் இருந்த கடன்களுக்கு ரூ.2,200 கோடி மதிப்பிலான தொகை திரும்ப செலுத்தப்பட்டது.
வங்கி வழங்கிய கடன் ரூ.1,20,800 கோடியாக இருந்தது. அதில், சில்லறை வர்த்தக துறைக்கு வழங்கப்பட்ட கடன் 8 சதவீதம் உயர்ந்து ரூ.62,957 கோடியாக இருந்தது. அதேசமயம், பெரிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன் 7 சதவீதம் சரிந்து ரூ.57,843 கோடியாக காணப்பட்டது.
பெரு நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் இலக்கை குறைத்துள்ளோம். குறிப்பாக, மின்சாரம் மற்றும் உள்கட்டமைப்பு பிரிவுகளுக்கு கடன் வழங்குவது தவிர்க்கப்பட்டுள்ளது. அதேசமயம், சாலை, குடிநீர் மற்றும் நீர்பாசன வசதி திட்டங்களுக்கு அதிக அளவில் கடன் வழங்கி வருகிறோம் என்றார் அவர்.