தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த டெக் மஹிந்திராவின் மூன்றாம் காலாண்டு வருவாய் ரூ.7,557.5 கோடியாக இருந்தது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் வினீத் நய்யார் தெரிவித்ததாவது:
சர்வதேச அளவில் தகவல் தொழில்நுட்ப சேவைகளுக்கான தேவை சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது. இதற்கான ஒப்பந்தங்களை வலுவான அளவில் பெற்று நிறைவேற்றி தந்ததையடுத்து நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் டெக் மஹிந்திராவின் வருவாய் 12.7 சதவீதம் அதிகரித்து ரூ.7,557.5 கோடியாக இருந்தது.
கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.6,701.1 கோடியாக காணப்பட்டது.
மொத்த வருவாயில் தகவல் தொழில்நுட்ப சேவை மூலமாக கிடைத்த வருவாயின் பங்களிப்பு ரூ.7,031.16 கோடியாகவும், பி.பி.ஓ. சேவைகள் மூலமாக கிடைத்த வருவாயின் பங்களிப்பு ரூ.526.31 கோடியாகவும் இருந்தது.
நிகர லாபம் ரூ.751.3 கோடியிலிருந்து 14 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.856 கோடியானது.
நிறுவனம் ஈட்டிய வருவாயில் அமெரிக்காவின் பங்களிப்பு 46.7 சதவீதமாகவும், ஐரோப்பா மற்றும் இதர நாடுகளின் பங்களிப்பு முறையே 29.4 சதவீதம் மற்றும் 23.9 சதவீதமாகவும் இருந்தது.
மூன்றாவது காலாண்டில் புதிதாக 4,209 பணியாளர்களை இணைத்துக் கொண்டதையடுத்து, டிசம்பர் மாத இறுதி நிலவரப்படி நிறுவனத்தின் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கை 1,17,095-ஆக இருந்தது என்றார் அவர்.