ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு "மொபைல் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விபத்து காப்பீட்டு வசதியை பேடிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, பேடிஎம் மூலமாக வாங்கும் ஸ்மார்ட்போன்களுக்கு ஓராண்டுக்குள் எதிர்பாராத விதமாக சேதம் ஏற்படும் பட்சத்தில் அதற்கான இழப்பீடு வழங்கப்படும். குறிப்பாக, ஸ்மார்ட்போன் திருட்டு, ஸ்மார்ட்போனில் ஏற்படும் திரை சேதம், தண்ணீரால் ஏற்படும் சேதத்துக்கு இந்த இழப்பீடு கிடைக்கும். இதற்காக, வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போனில் விலையில் 5 சதவீதம் வரை பிரிமீயமாக செலுத்த வேண்டும்.
ஆப்பிள், ஜியோமி, மோட்டோரோலா, விவோ, ஓப்போ உள்ளிட்ட நிறுவனங்களின் மாடல்களுக்கு இந்த பாதுகாப்பு வசதி கிடைக்கும் என்று பேடிஎம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேடிஎம் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி அமித் சின்ஹா தெரிவித்ததாவது:
ஸ்மார்ட்போன் நமது வாழ்க்கையின் முக்கிய அங்கமாகி விட்டது. அதற்காக, கணிசமான தொகையை செலவழிக்கிறோம். அந்த ஸ்மார்ட்போன் எதிர்பாராத விபத்தால் சேதமடையும்போது ஏமாற்றமடைவதுடன், அதற்காக செலவிடும் தொகையும் அதிகம். இதனை உணர்ந்தே வாடிக்கையாளர் பயனடையும் வகையில் இந்த திட்டத்தை நிறுவனம் செயல்படுத்தியுள்ளது என்றார் அவர்.