அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், பங்கு வெளியீட்டில் களமிறங்குவதற்கான அனுமதியை பங்குச் சந்தை ஒழுங்காற்று ஆணையத்திடமிருந்து (செபி) பெற்றுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பொதுப் பங்கு வெளியீட்டின் மூலம் ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் 1.67 கோடி பங்குகளையும், இதுதவிர, கோரிக்கை அடிப்படையிலான விற்பனை மூலம் ரிலையன்ஸ் கேபிடல் 5.03 கோடி பங்குகளையும் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. தற்போது இந்த பொதுப் பங்கு வெளியீட்டுக்கு செபி அனுமதி அளித்துள்ளது.
இந்த பங்கு விற்பனையின் மூலம் கிடைக்கும் ஒரு பகுதி தொகையைக் கொண்டு தொடர்ந்து அதிகரித்து வரும் நிறுவனத்தின் கடன் சுமையை குறைப்பதற்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. எஞ்சிய தொகை நிறுவனத்தின் எதிர்கால மூலதன தேவைகளை ஈடு செய்யவதற்காக பயன்படுத்திக் கொள்ளப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாத நிலவரப்படி, ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவன மதிப்பு ரூ.1,250 கோடியாக இருந்தது. இந்த நிறுவனத்தின் மதிப்பு சராசரியாக 5 மடங்கு அதிகரித்து ரூ.6,000 கோடி அளவுக்கு அதிகரிக்கும் என்று வணிக வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.