மேட்ரிக்ஸ் என்ற தொழில்நுட்ப நிறுவனம் தற்போது ஆதார் பயோமெட்ரிக் சாதனத்துடன் தொலைதொடர்புத்துறை மற்றும் பாதுகாப்பு அம்சங்களை ஒன்றிணைக்கும் விதமான புதிய கருவியை புதன்கிழமை வெளியிட்டது.
தற்போது மேட்ரிக்ஸ் நிறுவனத்தின் இந்தப் புதிய தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலமாக ஆதார் உடன் முழு விவரங்களும் ஒன்றிணைக்கப்படும். இதன்மூலம் பல்வேறு சாதனங்களுடனும் ஆதார் விவரத்தை இணைக்க உதவும்.
இதன் புதிய கருவி இந்தியாவில் முதல்கட்டமாக ஐதராபாத், விஜயவாடா, சென்னை, பெங்களூரு, கொச்சின், போபால், ஜெய்பூர், மும்பை, புணே, புவனேஸ்வர், கொல்கத்தா, தில்லி மற்றும் சண்டிகரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் வர்த்தகப் பரிவு முதன்மைத் தலைவர் தெரிவித்ததாவது:
இந்த ஆதார் விவரங்கள் இணைக்கப்பட்ட கருவியை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த முடியும். எந்த நேரத்திலும் தடையில்லாமல் இயங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப ரீதியாக அனைத்து வகையிலும் சிறப்பான முறையில் இயங்கும். அரசாங்க நிறுவனங்களில் ஊழியர்களின் வருகைப்பதிவு விவரங்கள் சரியான முறையில் கண்காணிக்க முடியும்.
பிரதமர் கூறும் டிஜிட்டல் முறைக்கு ஏற்ற விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தனிநபரின் அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்க முடியும். இந்தக் கருவியின் மூலம் தனிநபரின் தேவையை அரசாங்கம் எளிதில் சரிசெய்ய முடியும் என்றார்.
மேட்ரிக்ஸ் என்ற நிறுவனம் 1991-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் வர்த்தகம் தொடர்பான தொழில்நுட்பத்தை வெளியிட்டு வருகிறது. இதன்மூலம் தினந்தோறும் மாறுபடும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி அதனை நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப வெளியிட்டு வருகிறது. குறிப்பாக பாதுகாப்பு மற்றும் தொலைதொடர்புத்துறை சார்ந்த தொழில்நுட்பங்களை வெளியிட்டு வருகிறது.
இவை அனைத்தும் உலகத் தரத்தில் இருப்பது போன்று வடிவமைக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் இந்நிறுவனம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்ப உடனடியாகவும், தரமானதாகவும் தொழில்நுட்பங்களை வடிவமைத்துத் தருகிறது. இதன்மூலம் அவர்களின் நம்பகத்தன்மையைப் பெற்றுள்ளது. மேலும், உலகளவில் பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்படுத்தி சாதனைப் படைத்து வருகிறது.