மத்திய அரசுக்கு சொந்தமான கோல் இந்தியா நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.3,786 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செபி-க்கு தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில் கோல் இந்தியா நிறுவனத்தின் நிகர வருவாய் ரூ.25,470.86 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.21,774.42 கோடியுடன் ஒப்பிடும்போது இது 17 சதவீதம் அதிகமாகும்.
வருவாய் அதிகரித்த அதேவேளையில் நிறுவனத்தின் செலவினமும் ரூ.17,837.17 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.19,383.99 கோடியானது. நிகர லாபம் ரூ.2,350.78 கோடியிலிருந்து 61 சதவீதம் உயர்ந்து ரூ.3,786.44 கோடியாக காணப்பட்டது.
இக்காலாண்டில் நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி 13.68 கோடி டன்னாக இருந்தது என கோல் இந்தியா தெரிவித்துள்ளது.
உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியா 80 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது. நடப்பு 2018-19 நிதி ஆண்டில் 63 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்ய இந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.