பரஸ்பர நிதியங்கள் நிர்வகித்து வரும் சொத்து மதிப்பு நவம்பர் இறுதி நிலவரப்படி ரூ.24.03 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
பரஸ்பர நிதித் துறை வர்த்தகத்தில் 42 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு அக்டோபர் மாத நிலவரப்படி ரூ.22.23 லட்சம் கோடியாக இருந்தது.
இந்த நிலையில், நவம்பர் மாத இறுதி நிலவரப்படி இந்த சொத்து மதிப்பு 8 சதவீதம் அதிகரித்து ரூ.24.03 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
இந்த சொத்து மதிப்பு கடந்தாண்டு நவம்பர் இறுதி நிலவரப்படி ரூ. 22.79 லட்சம் கோடியாக காணப்பட்டது.
லிக்யுட் பண்ட், பங்கு மற்றும் அது சார்ந்த சேமிப்பு திட்டங்களில் அதிகளவில் முதலீடு செய்யப்பட்டதே பரஸ்பர நிதியங்களின் சொத்து மதிப்பு அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது.
லிக்யுட் பண்ட் திட்டங்களில் ரூ.1.36 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர, பங்கு மற்றும் அது சார்ந்த திட்டங்கள் ரூ.8,400 கோடியும், பேலன்ஸ்டு பண்ட் திட்டங்கள் ரூ.215 கோடியும் ஈர்த்துள்ளன.
முக்கிய திருப்பமாக, கடந்த பல மாதங்களாக கோல்டு இடிஎப் திட்டங்களிலிருந்து முதலீட்டாளர்கள் பலர் முதலீடுகளை திரும்பப் பெற்று வந்த நிலையில் தற்போது ரூ.10 கோடியை அதில் முதலீடு
செய்துள்ளனர்.
ஆனால் வழக்கத்துக்கு மாறாக, இன்கம் பண்ட் திட்டங்களிலிருந்து ரூ.6,518 கோடி மதிப்பிலான தொகையை முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
பரஸ்பர நிதி திட்டங்களில் அக்டோபரில் ரூ.35,500 கோடி முதலீடு செய்யப்பட்டிருந்த நிலையில், நவம்பரில் இது ரூ.1.42 லட்சம் கோடியாக அதிகரித்திருந்தது என பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.