கடந்த 11 மாதங்களில் இந்திய நிறுவனங்கள் அறிவித்த கையகப்படுத்துதல் நடவடிக்கைகளின் மதிப்பு 8,210 கோடி டாலர் (ரூ.5.74 லட்சம் கோடி) என கிராண்ட் தோர்ன்டன் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
நடப்பாண்டின் ஜனவரி முதல் நவம்பர் வரையிலான 11 மாத கால அளவில் 8,210 கோடி டாலர் மதிப்பிலான இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் திட்டங்களை இந்திய நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
கடந்தாண்டு நவம்பரில் 320 கோடி டாலர் மதிப்பிலான 39 ஒப்பந்தங்கள் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்த நிலையில் நடப்பாண்டு இதே கால அளவில் இவை மதிப்பின் அடிப்படையில் 27 சதவீத சரிவையும், ஒப்பந்தங்களின் எண்ணிக்கை அடிப்படையில் 31 சதவீத சரிவையும் சந்தித்துள்ளன.
பினானி சிமென்டை அல்ட்ராடெக் கையகப்படுத்திய நிகழ்வே நவம்பரில் மிகப்பெரிய ஒப்பந்தமாக கருதப்படுகிறது. இதைத் தவிர, அக்ரிடிரேட் ரிசோர்சஸ் சத்தீஸ்கரைச் சேர்ந்த எஸ்கேஎஸ் பவர் ஜெனரேஷன் நிறுவனத்தை கையகப்படுத்தியது, சிப்லாவின் துணை நிறுவனமான இன்வாஜென் பார்மா அமெரிக்காவைச் சேர்ந்த அவென்யு தெரபடிக்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியது உள்ளிட்டவை நிறுவன உலகில் முக்கியமான நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன.
நடப்பாண்டு நவம்பர் வரையில் இந்திய நிறுவனங்கள் சார்பில் இணைத்தல்-கையகப்படுத்துதல் தொடர்பாக 437 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மதிப்பு 8,210 கோடி டாலர். கடந்தாண்டு இதே கால அளவில் இவை 391 ஒப்பந்தங்கள்; 4,008 கோடி டாலர் மதிப்பு என்ற அளவில் காணப்பட்டன.
தொலைத்தொடர்பு, இணைய வணிகம், தயாரிப்பு, எரிசக்தி, வேளாண்மை, வங்கி, தகவல் தொழில்நுட்பம், மருந்து ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் மதிப்பு ஒட்டுமொத்த கையகப்படுத்துதல் நடவடிக்கைகளில் 93 சதவீதமாக இருந்தது என கிராண்ட் தோர்ன்டன் தெரிவித்துள்ளது.